கல்கியின் பொன்னியின் செல்வன்...
கல்கியின் பொன்னியின் செல்வன்(the son of Kauveri) நாவலைப்பற்றி மணிக்கணக்காக பேசிக்கொண்டிருப்பதில் ரொம்ப சந்தோஷம் உண்டு.
பொ.செ ரேடியோ நாடகக்குழுவினருக்கு விருதுகள் தரப்பட்டது என்ற செய்தியை The Hinduவில் பார்த்ததும் ஒரு கேள்வி என் மனதுக்குள்..."ஏன் பொ.செ.னை (சினிமா)படமாக எடுக்கமுடியவில்லை?"
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் தொடங்கி பத்மC கமல் வரை முயற்சி பண்ணிப்பார்த்துவிட்டார்கள்...
"நான்கு தலைமுறை வாசகர்களைக்கொண்டது பொ.செ., ஒவ்வொரு வாசகனும் கதாப்பாத்திரங்களை ஒவ்வொரு விதமாக கற்பனை பண்ணிவைத்திருப்பார்கள். அவர்களை திருப்தி செய்வது கடினம்..." என்பது திரு.கமல் அவர்களின் வருத்தம்.
இந்தக்காரணத்தால், ஒரு விறுவிறுப்பான, சஸ்பென்ஸ் நிறைந்த மகாக்காவியத்தின் visual treat-டை எதிர்பார்த்த நல்ல ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான்.
கொஞ்ச நாட்களுக்குமுன், தமிழ் டிவிக்காக இரு வெவ்வேறு தயாரிப்பாளர்களால் தனித்தனியே தொடங்கப்பட்டு பிறகு பிரச்சனை ஏற்பட்டு அதுவும் நிறுத்தப்பட்டது...ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றம்.
பலகாலம் பலபேரால் படிக்கப்பட்டு, அத்தனை கதாப்பாத்திரங்களும் போர்க்காட்சிகளும் ஆழமாகப்பதிந்த இராமாயணமும், மகாபாரதமும்தான் இந்தி டிவியில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டு சக்கைபோடு போட்டது... ('சக்திமான்' பார்த்தால் 'பீஷ்மர்' ஞாபகந்தாங்க வருது)
சரித்திரக்கதைக்கு திரைவடிவம் கொடுப்பதில் ஒரு சிக்கல் உண்டு...அரண்மனை செட் போட்டு கஷ்டப்பட்டு எடுத்துக்கொண்டிருப்பார்கள், தூரத்தில் டொயாட்டோ கார் போய்கொண்டிருக்கும்...நவீன காலத்தின் அடையாளங்களை என்ன வேஷம் போட்டும் மறைக்கமுடியாது.
தற்பொழுது நம்மளால் முடிந்தது, ஒன்றே ஒன்றுதான்... எந்தெந்த கதாப்பாத்திரத்திற்கு யார்யார் பொருத்தமாகயிருப்பார்கள் என்று பேசிக்கொண்டிருக்கலாம்...
கவுரவமிக்க இராஜராஜச்சோழனுக்கு கமல்,சரிதானே?.
துறுதுறு வந்தியத்தேவனுக்கு, சூர்யா. கம்பீரமான பெரியபழுவேட்டரையருக்கு (காலஞ்சென்ற) ஆர்.எஸ்.மனோகர். கண்டிப்பான சின்னபழுவேட்டரையருக்கு ராஜ்கிரண். நந்தினிக்கு ஐஸ்(வில்லி)..என்ன நான் சொல்றது?
ஆழ்வார்க்கடியானுக்கு வடிவேலு அவர்களைப்போடலாம் என்றால், அவருடைய 'எக்குத்தப்பாக ஏதாவது பேசி எல்லோரிடமும் உதை வாங்கும்' இமேஜ் இடிக்கிறது...
புலிகேசி-23 காமெடியான அரசர்.அதற்கு அவர்தான் பொருத்தமானவர்.
(ஆழ்வார்க்கடியான் சிக்கலில் மாட்டிக்கொள்பவர் இல்லை...அதிலிருந்து சாதுர்யமாக தப்பிப்பவர்)
ஆமா...ரொம்பநாளா ஒரு சந்தேகம்...
ஆதித்தகரிகாலன் இறந்தது எப்படி?
22 Comments:
ஐயா! மறுபடி பொன்னியின் செல்வன் படிக்கும் ஆவலை தூண்டிட்டிங்க..
விடியகாலை 4 மணி வரையிலும் கூட கையில் எடுத்த புத்தகத்தை வைக்காம படிச்சி முடிச்சிருக்கேன்.. (ஒரு 8 மாசம் முன்னதான்) ஒரு நாள் கூட விட மனசே வராது..
எனக்கு ரொம்ப பிடிச்ச கதா பாத்திரம் ஆழ்வார்க்கடியான்.
என் மனத்திரையில் அவர் கொஞ்சம் கட்டையாக குட்டையாக (அப்படித்தான் ஆசிரியர் வருணித்திருப்பார்) அப்படிப்பார்த்தால் வடிவேலு சரியில்லை.
பழம்பெரும் நடிகர் பாலைய்யா அல்லது தங்கவேலு சரியாக இருக்கும். என்னைப்பொருத்தவரை பாலைய்யா கச்சிதமாக பொருந்துவார்..
இந்த காலத்தை எடுத்துக்கொண்டால்.. ம்ம்ம்ம்... அப்படி ஒருவரை தேடவேண்டும்.
உங்க தலைப்பைப் பார்த்ததும் கீதாவுக்குத் தோன்றியதே தான் எனக்கும் ..அநேகமாக ஒருநூறு முறை படித்திருப்பேன்... இப்போதும் படிக்க ஆசை..கைவசம் புத்தகம் இல்லையே..இந்த தலைப்பைப் போட்டு ஆசையைத் தூண்டிவிட்டீர்கள்.
வந்தியத்தேவனை யாராகக் கற்பனை செய்தாலும் திரு மணியம் செல்வத்தின் ஒவியத்திற்கு ஒப்பாகாதே..
கல்கியின் வர்ணனை தான் நம்மை லயிக்கவைப்பது..திரைப்படத்தில் சிறிது சிரமம் தானே..
சில புத்தங்கள் எழுத்துவடிவில் இருப்பதே அழகு...
வாழ்த்துக்கள்
சுகா
//Geetha: "ஐயா! மறுபடி பொன்னியின் செல்வன் படிக்கும் ஆவலை தூண்டிட்டிங்க.."//
//s.karthik:"இப்போதும் படிக்க ஆசை..கைவசம் புத்தகம் இல்லையே..இந்த தலைப்பைப் போட்டு ஆசையைத் தூண்டிவிட்டீர்கள்.//
ஏதோ நம்மாள முடிந்தது, நாராயணா...!!!
இப்படிக்கு,
கலியுக நாரதர்
புத்தகம் இல்லையேனு கவலைப்படாதீங்க,கார்த்திக்.
இந்த வலைதளத்தில் இலவசமா கல்கி அவர்களின் பொ.செ, சிவகாமியின் சபதம் எல்லாம் தர்றாங்க. ஆனால், நிகழ்நேரமாக படித்துக்கொள்ள வேண்டியிருக்கும்...
அன்புடன்,
கார்த்திகேயன்
பொன்னியின் செல்வன் எனக்கும் மிகவும் பிடித்த நாவல். மிகவும் அற்புதமானது.
வந்தியத்தேவன் பாத்திரத்திற்கு சூர்யாவும் குந்தவை பாத்திரத்திற்கு ஜோதிகாவும் பொருத்தமாகவே இருப்பார்கல். (இருந்துட்டுப் போகட்டுமே.)
நந்தினிக்கு ஐஸ் வேண்டாம். ஒல்லிக் குச்சி நந்தினியைப் பாக்கச் சகிக்காது. அசின் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றுகிறது. இல்லையென்றால் மீரா ஜாஸ்மின் தான் பெஸ்ட். உருண்டை முகம். நடிப்புத் திறமை. பொருத்தமாக இருக்கும்.
கண்டிப்பாக கமலஹாசனை அருள்மொழி வர்மனாக ஏற்றுக் கொள்ள முடியாது. வந்தியத்தேவனை விடச் சின்னவனாகவும் இருக்க வேண்டும். சூர்யாவை விட இளசாகப் பிடிக்க வேண்டும். கண்டிப்பாகப் புதுமுகம்தான்.
ஆனால் கமலஹாசனுக்கும் கதையில் இடமிருக்கிறது. ஆமாம். சுந்தரசோழராக நடிக்க அவர்தான் பொருத்தமானவர். ஃபிளாஷ் பேக் காட்சிகளில் இளமையான கமலைக் காட்டி விடலாம்.
ஊமைச்சியாக நடிக்க மீரா ஜாஸ்மின் இரட்டை வேடம் போடுவார்.
ஆதித்த கரிகாலனாக ஆர்யாவைப் போடலாம். கொஞ்சம் வெளுத்த கரிகாலனாக இருக்கும். இல்லையென்றால் விக்ரமைப் போடலாம். ஒத்துக்கொள்ள மாட்டார் என்றே நினைக்கிறேன். ஆகையால் ஆர்யாவே இருக்கட்டும். இல்லையென்றால் விஷால்.
ஆழ்வார்க்கடியனுக்குப் பாலையாதான் பொருத்தமானவர். ஆனால் இப்பொழுது என்ன செய்வது? ஜூனியர் பாலையாவைப் போடலாம். வேறு யாரும் தோன்றவில்லை.
பெரிய பழுவேட்டரையரா....யாரப் போடுறது...பெஸ்ட் பசுபதிதான். கொஞ்சம் மேக்கப்பில் மெனக்கெட்டால் மிகவும் நன்றாகவே இருக்கும். பொருத்தமாகவும் இருக்கும்.
சின்னவராக நடிக்க.....புதுமுகம்தான் தேவை.
ஆதித்தகரிகாலன் கொலை - பாண்டி நாட்டு ஆபத்துதவிகள்தான் கொன்றார்கள். நந்தினி கற்பனைப் பாத்திரம் என்பதால் அவள் கொல்லவில்லை என்றுதான் கொள்ள வேண்டும். ரவிதாசனே அந்தக் கத்தியைப் பிடுங்கிக் குத்தினான் என்று நாமே முடிவு செய்வதுதான் நல்லது.
அட! மணிமேகலையை விட்டு விட்டோமே! யார் யார் யார் பொருத்தமாக இருப்பார்கள்?
நன்றி கார்த்திகேயன்.
ராகவன் எழுதியதைப் பார்க்கும் போது நம்ம நடிகர்கள் அவர்கள் பாணியிலேயே இந்தக் கதையில் நடித்தால் எப்படியிருக்கும் என கற்பனை செய்து எழுதக் கை துடிக்கிறது :). ஆனால் பொன்னியின் செல்வனைக் கொலை செய்ய வேண்டாமே என்று மனம் மறுக்கிறது.
சுகா
பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுப்பதை பற்றி என் கருத்தையிம் இங்கே பாருங்களேன்.
பொன்னியின் செல்வன்
ராஜ ராஜ சோழன் இறக்கும் பொழுது 60 வயதாம். அதனால், அதே 60-ஐ நெருங்கும் கமக்ஹாசனை அந்த வேடத்துக்கு போட முடியுமா? வேண்டுமானால், பெரிய பழுவேட்டறைய்யர் வேடம் கொடுக்கலாம் (கமல் விசிறிகள் என்னை மன்னிக்க).
நந்தினி - நிச்சயம் ஐஸ், காரணம், நந்தினி கதாபாத்திரம் முழுக்க அழகை வைத்தே வெற்றிப் பெறுவது. அதனால், ஐஸ் தான் reality-ஆ இருக்கும் (இப்போ கமல் ரசிகர்கள் என்ன சொல்றீங்க)
"சைதை" சீனு.
அடியாத்தி...இம்புட்டு ஆர்வத்தில இருக்கீக!!! (நிஜமாகவே இதைப்பற்றி பேசிக்கொண்டிருப்பதில் ஆனந்தம்தான்...)
ராகவன் சொன்னதுபோல, சூர்யா-ஜோதிகா சரி...ஏன் நந்தினிக்கு ஐஸ் வேண்டாம்? சுந்தரசோழருக்கு கமல் சரியான தேர்வு.
ஆதித்தகரிகாலன் ஒரு டென்ஷன்காரர்...(மேக்கப்)ஆர்யா பொருத்தமாக இருப்பார்...
விஷால்,சாது...
ஆழ்வார்க்கடியானுக்கே தேர்ந்த கதாநாயகர்களைத்தான் போடவேண்டும்...
(மலையாள திலீப் நன்றாகயிருப்பார்)
மாநிற மணிமேகலைக்கு, (காதல்)சந்தியா பொருத்தமாகயிருக்கமாட்டார்?
சுந்திரசோழரின் காதலியாக மீரா ஜாஸ்மின் டபுள் ஓகே. பசுபதியையும் கதையில் சேர்க்கலாம்...(ஆனால் பசுபதி, சி.பழுவேட்டரையருக்குதான் சரியாக இருப்பார்)
பெ.ப-வுக்கு ஆள்தேட வேண்டும்...
அன்புடன்
கார்த்திகேயன்
ஆதித்த கரிகாலனுக்கு கண்டிப்பாக விக்ரம்-ஐ போடலாம். Macho man. அதுவும், "ஆகாயச் சூரியனை..." பாடலில் வரும் விக்ரமை நினைத்துக் கொள்ளுங்களேன்.
சீனு.
ungal ponniyin selvan patriya pathivai ippo than parthen. Aalvarkkadiyan pathirathiruku Senthilai poduvathu enru paperil padiththaga ninaivu. matrapadi idhu thiraippadamaga athan spirit (aanma) kuraiyamal edukka siranatha directors yarum iruppathu pol theriyavillai.
i dont think i can post in tamil. i dont have the necessary softwares, so my apologies. but this is a piece de-resiste to not comment.
arya will fit in adityan role
meera may have a round face and all, but m not sure if she can handle the heavy nandini role.
shouldn't prakash raj fit into either pazhuvettaraiyar role?
பொன்னியின் செல்வனை பற்றி படிக்கறது பேசறது எல்லாமே சுவையான விசயம்தான்.
மணிமேகலை பாத்திரத்துக்கு நம்ம நந்திதா தாஸ் சரியா வருவாங்கனு நெனக்கிறேன். அதுசரி பூங்குழலியா யார போடலாம்? முக்கியமான பாத்திரமாச்சே.
புதிய மறுபதிவுகள் வந்தபோது 'அண்மையில் மறுமொழியப்பட்ட...' பட்டியலில் இந்த பதிவு சேராததனால், ஒரு சோதனைப்பதிவு...
நன்றி...
அன்புடன்
கார்த்திகேயன்
இராமாயணம்,மகாபாரதம் டி.வி
தொடர்களில் நடித்த அனைவரும் பெரும்பாலும் புதுமுகங்கள்என்றாலும்,
கதையை சுருக்காமல் விரிவாக
எடுத்த ராமானந்தசாகரின் தேர்ந்த இயக்கமும்,செலவு பார்க்காமல்
போட்ட செட்களும்,ஆடை,
அணிகலன்களும் வெற்றியைத தேடித்தந்தன.அதே நேரத்தில் கலைஞரின் தென்பாண்டிச்சிங்கத்தை
எண்ணிப்பாருங்கள்.படிக்கும்போது
இருந்த வேகமும்,விறுவிறுப்பும்,
சன் டிவியில் தொடராக வ்ந்தபோது இல்லையே!!!!!.
நல்ல தயாரிப்பாளர்,சிறந்த இயக்குனர்,தேர்ந்த நடிகர்கள் மூலம்
நாம் கதையில் படித்தவை கண்முன் காட்சிகளாய் விரிய எல்லாம்வல்ல
இறைவன் அருள்புரிவானாக!!!!!!.
அன்புடன்,
துபாய் ராஜா.
இது போன்ற ஆர்வம் மிக்கவர்களுக்கென்றே ஒரு யாஹூ குழுமம் இருக்கிறது.
http://groups.yahoo.com/group/ponniyinselvan
பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.
நன்றி
கமல்
Aditha Karikaalanukku Prakashraj nandraaga porundhuvaar.
கார்த்திகேயன்,
பொன்னியின் செல்வன் யாகூ குழுமம் போல பொன்னியின் செல்வன் பற்றி பதிவுகள் இட, விவாதிக்க ஒரு கூட்டு வலைப்பதிவு ஆரம்பியுங்களேன். அப்படி ஆரம்பித்தால் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அன்புடன்,
மா சிவகுமார்.
நான் இதை எத்தனை முறை படித்திருப்பேன் என்று எண்ணியதில்லை. வேறு உருப்படியான புத்தகம் கிடைக்கவில்லையென்றால் உடனே பொ.செ.யை தூக்கி படிக்க ஆரம்பித்துவிடுவேன். அப்படி தூக்கும்பொழுது இந்த பாகம் என்ற விதிமுறையெல்லாம் நமக்கு கிடையாது. எந்த பாகம் முதலில் கைக்கு கிடைக்கிறதோ அதிலிருந்து தொடங்குவேன். ஆனால் பொ.செ.யில் உள்ள பெரிய குறையே(வஞ்ச புகழ்ச்சி!!!) அதை எடுத்து விட்டால் கடைசி வரை முடிக்காமல் கீழே வைக்க முடியாது!
எனது கதாபாத்திரங்கள் சாய்ஸ்:
பொ.செ.க்கு கமல் பொருத்தம்தான். ஆனால் அவருக்கு இப்பொழுது வயது தெரிகிறது. பொ.செ.யை கல்கி இளமையானவராக காட்டியிருப்பார். மேலும் உயரமானவர். அதனால் எனது இப்போதைய தேர்வு மாதவன்.
வ.தே.வுக்கு சூர்யாவை விட மாதவன் மிக பொருத்தமாக இருப்பார். பொ.செ. கமலென்றால், மேடியை வ.தே. ஆக்கி விடலாம். ஆனால் மேடியை ஏற்கெனவே பொ.செ.யாக்கி விட்டதால், வ.தே.வுக்கு சூர்யாவை சிபாரிசு செய்கிறேன்.
பெ.பழுவேட்டயருக்கு கம்பீரம் மட்டும் போதாது; சில நேரங்களில் நந்தினியிடம் அசடு வழியவும் வேண்டும். அதனால் இந்த கேரக்டருக்கு நக்கலில்லாத சத்யராஜ் பொருந்துவார்.
சி.ப : இவர் பெ.ப.வை விட கொஞ்சம் உயரம் குறைவு(என்னை பொறுத்தவரையில்). ஆஜானு பாகுவான தேகம் கிடையாது. ஆனால் இரும்பூ போல் இருக்க வேண்டும். மூக்கும் கூர்மயாக இருக்க வேண்டும். ஓரளவு நாஸர் பொருந்துவார்(ஓரளவுதான்)
நந்தினி : அதுயேன் எல்லோரும் நந்திக்கு ஐஸையே சிபாரிசு செய்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை. நந்தினிக்கு உருண்டையான முகம். ஆசிரியரே இதை குறிப்பிடுகிறார். ஐஸ் உருண்டை முகம் கிடையாது என்பது எனது கருத்து. மேலும் நந்தினி உயரம் குறைவு. இப்போதைய ஹீரோயின்களில் மீரா ஜாஸ்மின் ஓரளவுக்கு நந்தினி பாத்திரத்துக்கு பொருந்துவார்.
ஆ.வா. வுக்கு இப்போதைக்கு யாரும் பொருத்தமில்லை.
குந்தவை : பொ.செ.யில் எனக்கு மிகவும் பிடித்த பாத்திரம் இதுதான். குந்தவை ரசிகர் மன்றம் ஒன்று வைத்து அதற்கு தலைவராகலாமா என்று கூட ஒரு யோசனையிருக்கிறது ரொம்ப நாட்களாக. இதற்கு இப்பொதைய ஹீரோயின்கள் யாருமே பொருந்த மாட்டார்கள். பழைய பத்மினி, சாவித்திரி இருவரும் இந்த பாத்திரத்துக்கு பொருத்தமானவர்கள்.
அட பொ.செ.யை பற்றி பேச ஆரம்பித்தாலே இப்படித்தான்! உற்சாகம் பீறிட்டடிக்குது!! பின்னூட்டம் எழுதலாம்னு ஆரம்பிச்சா, பதிவா போடுற அளவுக்கு டைப் பண்ணிட்டேன். ஏம்பா இப்படி பண்றீங்க? இப்ப மறுபடி படிக்கனும்;)
ஆங்! மறந்துட்டேன். அரவிந்த்! சொன்ன மாதிரி ஆதித்த கரிகாலனுக்கு பிரகாஷ்ராஜ் செம பொருத்தம்
கார்த்திகேயேன்,
உங்கள் பதிவுக்கு மறுமொழி இடப்போய் - தனிப்பதிவாகி விட்டது ...! :-)
இங்கே பார்க்கவும்:
http://jeevagv.blogspot.com/2006/06/blog-post_18.html
இந்த கதையை படித்து களித்த நாட்களில் சுந்தர சோழருக்கு பொருத்தம் என நினைத்தது சிவாஜி ஒருவரைத்தான்.. அவர் போல யாரும் அந்த பாத்திரத்துக்கு பொருந்த மாட்டார்கள்.
வந்தியத்தேவனுக்கு கமல் பொருத்தமாக இருப்பார்.
நந்தினிக்கு -sridevi ( ஐஸ் - நடிப்பு OK.. ஆனால் உருவம் கதையில் வர்னித்தது போல் வராது..)
குந்தவைக்கு அசின்..
நடிப்புலகில் எதையும் விட்டு வைக்காத நடிகர் திலகம் தான் ராஜராஜனாக நடித்துவிட்டாரே வந்தியத்தேவனாக நடித்தால் அது ராஜராஜனுக்கு அவமரியாதையாகப் போய்விடாதா?
அட, இதுகூட நல்லாயிருக்கே! நன்றி ஜீவா அவர்களுக்கு!
கல்கி அவர்களின் நாவல்களின் மீதுள்ள பாசத்தினால், இந்த பதிவிற்கு தொடர்ந்து பின்னூட்டமிட்டு வரும் நண்பர்களுக்கும் என் நன்றிகள்...
அந்த பின்னூட்டங்கள்தான் எனக்கு மிகுந்த உற்சாகம் தந்து மென்மேலும் எழுதத்தூண்டுகிறது...
//விவாதிக்க ஒரு கூட்டு வலைப்பதிவு ஆரம்பியுங்களேன். அப்படி ஆரம்பித்தால் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.//
மா.சிவகுமார் அவர்கள் சொல்வதுபோல கூடிய விரைவில், ஒரு கூட்டுப்பதிவை இதற்காக ஆரம்பிப்பதற்கு ஆர்வமாக இருப்பவர்கள் சொல்லுங்கள், தொடங்கி விடலாம் உடனே...
நன்றி மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்
கார்த்திகேயன்
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home